படித்ததில் பிடித்தது | அப்பாவின் கையெழுத்து | கவிதைகள்

அப்பாவின் கையெழுத்து

அப்பாவின் கையெழுத்து

வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
” கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு ”
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன். Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

“எதுக்குத்தா .. இதுல என்ன போட்டிருக்காக? ”

“நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்னு
போட்டிருக்காங்க ”

“ஆமா .. அதாம் நமக்குப் படியளக்கப் போவுது..
கோட்டையில பொண்ணுபொறந்தாலும்
போட்ட புள்ளி தப்பாதுனு
எங்கிட்டுப் போயி இழுபடப் போவுதோ ..
அங்கிட்டு வீசிட்டு
ஆவுற சோலியப் பாப்பியளா ”
கொல்லையிலிருந்து
முள் நறுக்கிக்கொண்டு
கத்தும் அம்மா

” நீ கையெழுத்துப் போட்டா நேரமாயிரும்
மை தடவுறேன் … ரேக வையுப்பா ”

”நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா ?
கையெழுத்துப் போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன் ”
பேனா பதிப்பார், கலப்பை போல் அழுத்தி…

அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும் மனசு

உச்சி வெயிலில் ” பட்” டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
“சடக்” கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்

” வழிவிட்டான் மவன் சன்னாசின்னுதானத்தா
போடணும் ? ”

” வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர எழுதுப்பா நேரமாவுது ”

” அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன் ”
மாடொன்றைத்
தவறவிட்டு வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்

” இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு ”

எழுதி வைக்கும் பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும் இடம்

” அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா ”

அழுகை வந்துவிடும் எனக்கு
” அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும் ”
அட்டையைப் பறித்துக் கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ .. ரெண்டெழுத்தையோ
மதகில் அமர்ந்து நானே எழுதி

“போன தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு ”
கவலையோடு நுழைவேன் வகுப்பிற்குள்..

— இளம்பிறை

Last Updated on February 24, 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*