கவிதை தொகுப்பு : காயா
கவிஞர் : தேன்மொழி தாஸ்
பதிப்பகம் : மேகா Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.
காயா – தேன்மொழி தாஸ் கவிதைகள்
காயா மலர்கள்
முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்
அப்பூக்களின் நிறம் கடவுளின் தேகம்
—
இருளின் பேரகராதி இவள்தான்
பின் காயாதான் மூலவிதியானாள்
எனக்குள் காளியானாள்
மனக்கசப்பின் குறியீடானாள்
விதையின்றி தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்.
—
எனது புன்னகை இளகாதிருக்கும் நாளில்
வெறுமை பற்றிச் சொல்ல
என் மொழி
ஆட்டுக்குட்டியின் அடிவயிற்றுக் கதறலாகும்.
—
வண்ணமேறி பிறந்த வரிக்குதிரைகளாய் அலையும் மேகங்கள்
—
பூமியின் அச்சு சுழலும்
புள்ளி யார் கண்ணிலும்
படாமல் இருப்பதைப்போல்
நமது காதல் மறைந்தே வாழட்டும்.
—
நீர்வாழ்த் தாவரங்களின் மோகம்தான்
நீரின் அதிர்வுகள்.
—
மலைப்பாதைகளில் தந்திரக்காரனின் விரல்களென
அசைகின்றன பெரணிச்செடிகள்..
—
இரண்டு கடல்
இரண்டு பிரபஞ்சம்
இரண்டு பித்தப் பை
கண்ணாடி ஸ்தானங்கள்
பார்வை கொண்ட கூழாங்கற்கள்
அலையும் ஓவிய ஞானங்கள்..
தட்டானின் கண்கள்.
—
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்.
—
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்.
—
எனது ஆன்மா
சிறிய வைரப் புறாவின் கண்
—
இருவாட்சிப் பறவையின் அலகு
இருள் உறையும் காட்டின் மரப்பொந்தில்
பறந்தொளிவது போல்
இன்றைக்கும் சூரியன் மறைகிறது.
—
சிறுத்தைக் குட்டிகள் தன் தாயின் உடலில் அசையும்
காட்டின் கம்பீரத்தை நிமிண்டுகின்றன.
—
முத்த நீராலும் மலைப் படுகையின் மண்ணாலும்
குழைத்துக் கட்டப்படும் இருவாட்சியின்
பொந்து மழைக்காட்டின் குறியீடு
இவ்விரவில் இதன் அலகின் மஞ்சள் சூரியனின் உட்கரு.
—
மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்
—
காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன.
—
எங்கிருந்தோ தழுவும் உனது விரல்கள்
மலையாத்தி பூவிதழ்களாய்
என் மேல் உதிர்கின்றன.
—
துரோகங்களினால்
துடைத்துக் காலிசெய்யப்பட்டிருந்த
ஆன்மாவின் பாத்திரத்தில்
ஒரு துளியாய் விழுகிறது
உனது அன்பு.
—
எனது மனம்
சிறுத்தையின் வாயில் அகப்பட்ட
கலைமானின் கழுத்தாய்.
—
எனது இரவுகள் சிலந்தியின் நெசவுகள்
—
காத்திருப்பில்
காட்டுத்திராட்சைச்செடி என்மேல் படர்ந்துவிட்டது.
—
தட்டான்களின் முட்டைகள்
மலைவெளியெங்கும் நீர்நிலைகளில்
அதன் பால்யத்தோடு பருவகாலங்களையும் பதுக்கிவிடுகின்றன
மரணத்தை விதைக்க இடம்தேடுவதே
அதன் பறத்தல்
—
அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்
அடுப்படிப் புலம்பல்கள்
விதைகளற்ற தாவரங்களின்
வருத்தங்களாய் வெறுமனே
வெளியைப் பிடித்து கதறி அசைகின்றன.
—