கவிதை தொகுப்பு | அக்காளின் எலும்புகள் | வெய்யில் கவிதைகள்

கவிதை தொகுப்பு : அக்காளின் எலும்புகள்
கவிஞர் : வெய்யில்
பதிப்பகம் : கொம்பு Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

அக்காளின் எலும்புகள் கவிதைகள், வெய்யில்

அக்காளின் எலும்புகள்

 

அக்காளின் எலும்புகள் – வெய்யில் கவிதைகள்

ஆண்பிள்ளைதான் என்றாலும்
நான் கடைக்குட்டி,
கொஞ்சம் புத்திகாணாத சிறுவன்வேறு.
எனவே,
மிகச் சுலபமான வேலையைத்தான் கொடுத்தார்கள்.
கருவேல மரத்தூரில் கிடக்கும்
அக்காவின் வெட்டுண்ட தலையின்
கண்களை மூடும் வேலை.
ஆனாலும், அவர்களுக்கு ஆச்சர்யம்
”எப்படி… எப்படி?” என்று மிரண்டார்கள்.
கண்களை ஒரு முறை இமைக்கச் சொன்னேன்
அவள் கேட்டுக்கொண்டாள்.

அக்கா எப்போதும்
மின்மினிகளாயிரம் சூழவே வருவாள்
கொடுப்பினையற்ற நாம்
அவளை
எப்போதும் பகலிலேயே பார்த்திருக்கிறோம்.

அக்காவுக்கு அன்னாடம் விளக்குவைக்கிறோம்.
இருக்கும் திசையில் முட்டை வீசுகிறோம்
அவள் முதலெழுத்தில் பிள்ளைகளுக்குப்
பெயர்வைக்கிறோம்
ஆனாலும்
அடங்குவாளில்லை
வீட்டிலொரு கருப்பையைப் பொசுக்குகிறாள்
வாசலுக்கொரு தலைச்சனை முடக்குகிறாள்
அறுத்துக் கட்டிவரும்போது
வண்டி அச்சை முறிக்கிறாள்
ஓயுதில்லை அவள் ஆதாளி.
தீட்டுத்துணியைக் கவ்வியோடும் புலியை
எல்லோர் கனவிலும் ஏவுகிறாள் அக்கா.
அமாவாசை அன்று என்னதான் நடந்தது அப்பா?

அக்கா ஆகாத வயதில் வயசுக்கு
வந்தவள்.
ஏவல் கைகூடியவள்
சிறு செருமலில் பனம்பழங்களை
விழச் செய்கிறவள்
குளவிக் கூட்டு மண்ணை விரும்பி
உண்பவள்
செய்வினை செய்து கழித்த
கண்ணாடியில்
முகம் பார்த்தவளை
பின்பு யாரும் பார்க்கவே இல்லை.
தவச நாளில் வைக்கும் தளுவை
பொங்கி வழியும்போது
குலவைச் சத்தத்துக்கு நடுவே
அப்பா ரகசியமாய் அழுவார்.

மண முறிவுற்ற அக்கா குறிஞ்சிப்
பூக்களை காண விரும்பினாள்;
சூடவும்.
மிகத் தாமதமாகத்தான் புரிந்து
கொண்டோம்.
நள்ளென் யாமமே தான்
துயில் கலைந்திடாது மெல்ல
அரிந்து அவள் தலையை எடுத்துச்
சென்றோம் அங்கே நிலைத்த
விழிகளில் நீலம் திரும்புவதை
புகைப்பிடித்தபடி அப்பா பார்த்துக்
கொண்டிருக்கிறார்.”

ஆறு வருஷமாகிறது
புழங்காமல் பரணில் கிடந்த
பித்தளைக்குடத்தை விளக்க
எடுத்துச் செல்கிறாள் அக்கா.
வம்படியாக உச்சிக்கிளையேறி
புளியம்பழங்களை பறித்துக்
கொடுக்கிறார் அவர்.
ஆற்று நீரில் புளி கொண்டு அவள்
விளக்குகிற குடத்தின்
பொன்மினுக்கத்தில் சூரியன்
மங்குகிறது.
குடவாய் நீர் வாங்கும் ஒலியில்
ஊர் திகைக்கிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*